களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று(23) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் , களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மடிக் கணனியால் சிக்கிய ஆசிரியர்
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், குறித்த சந்தேகநபரை இன்று மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக ஆசிரியரின் மனைவி பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.